மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
47. திருவெண்பா
திருப்பெருந்துறையில் அருளியது
அணைந்தோர் தன்மை
நேரிசை வெண்பா
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன்-செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.
1
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன்-தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து.
2
செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன்-வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.
3
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்-தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து.
4
அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலும்மால் கொள்ளும்-இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது
இருந்துறையும் என்னெஞ்சத் தின்று.
5
பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை-அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து.
6
வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே-சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.
7
யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையாய்
யாவர்க்குங் கீழாம் அடியேனை-யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை.
8
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவருங் காணாச் சிவபெருமான்-மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.
9
இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்து
இருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாந்-தருங்காண்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து.
10
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com